Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

Spread the love

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)லீக் போட்டி.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தனது சொந்த மைதானத்தில் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் குவித்தது. கொல்கத்தா ரசிகர்கள் தங்கள் அணி எளிதாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் லக்னோ தடுமாறியது. ஒரு கட்டத்தில் அந்த அணி 145 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

முகுல் சௌத்ரி
முகுல் சௌத்ரி

வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அப்போதுதான் இளம் வீரர் முகுல் சௌத்ரி தனது விஸ்வரூபத்தை எடுத்தார். அவர் எதிர்கொண்ட 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

முகுல் சௌத்ரி பதற்றமின்றி விளையாடி, கடைசி பந்தில் தேவையான ரன்களை எடுத்து லக்னோ அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தார். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு ஐபிஎல் அரங்கில் மின்னல் வேக வீரராக உருவெடுத்துள்ள இவரின் வெற்றிக்குப் பின்னால், கண்ணீரும் கடனும் நிறைந்த ஒரு நீண்டக் கதை ஒளிந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த தலிப் சௌத்ரிக்கு, தனக்குப் பிறக்கும் மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது திருமணத்திற்கு முன்பே இருந்த கனவு. அந்தக் கனவை நனவாக்க அவர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

தனது மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக 2016-ம் ஆண்டு தனது சொந்த வீட்டை 21 லட்சம் ரூபாய்க்கு விற்றார். உறவினர்கள் அவரை “பைத்தியக்காரன்” என்று ஏளனம் செய்தபோதிலும், மகனின் திறமை மீது அவர் கொண்ட நம்பிக்கை குறையவில்லை.

தலிப் சௌத்ரி - முகுல் சௌத்ரி
தலிப் சௌத்ரி – முகுல் சௌத்ரி

ரியல் எஸ்டேட் தொழில் தோல்வி, ஹோட்டல் தொழிலில் நஷ்டம் என அடுத்தடுத்த சோதனைகள் தலிப் சௌத்ரியைச் சூழ்ந்தன. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் சிறைக்கும் செல்ல நேரிட்டது. கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசலில் நின்றபோது, முகுல் அந்த வலிகளை மௌனமாகச் சுமந்து கொண்டு பயிற்சியைத் தொடர்ந்தார்.

ஏழ்மை துரத்திய போதும், தன் தந்தை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் மட்டுமே முகுலிடம் இருந்தது.

சிறுவயதில் சச்சின் டெண்டுல்கரின் வீடியோக்களைப் பார்த்து வளர்ந்த முகுல், 2011 உலகக்கோப்பையில் தோனி அடித்த அந்தச் சிக்ஸருக்குப் பிறகு அவரது தீவிர ரசிகரானார். தோனியைப் போலவே ‘பினிஷராக’ வர விரும்பிய முகுல், 2025-26 காலப்பகுதியில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் (Under-23) 617 ரன்களை குவித்து அசத்தினார்.

குறிப்பாக, டெல்லிக்கு எதிரான போட்டியில் 26 ரன்கள் தேவைப்பட்டபோது நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

முகுல் சௌத்ரி
முகுல் சௌத்ரி

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக அறிவிக்கப்பட்ட முகுலை, லக்னோ அணி 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஏலத் தொகை உறுதியானதும் அவர் தனது தந்தையிடம் சொன்ன முதல் வார்த்தை, “அப்பா, நம் கடன்கள் அனைத்தையும் நான் அடைத்துவிடுவேன்” என்பதுதான்.

சமீபத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 27 பந்துகளில் அவர் நிகழ்த்திய அதிரடி ஆட்டம், ஒரு கிரிக்கெட் வீரரின் வருகையை மட்டுமல்ல, ஒரு தந்தையின் பல ஆண்டுகாலத் தவத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

தோல்விகள், ஏளனங்கள் மற்றும் சிறைவாசம் என அத்தனையையும் கடந்து, இன்று ஐபிஎல் அரங்கில் ஒரு நாயகனாக முகுல் சௌத்ரி உயர்ந்து நிற்பது பல இளம் வீரர்களுக்குப் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *