கைவிட்ட சரத்பவார்
மும்பையில் இப்படி என்றால் புனேயில் வேறு மாதிரியான நிலை இருக்கிறது. புனேயில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தது. ஆனால் அங்கு சரத்பவார் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகி வருகிறார். புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு பவார்களும் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் புனேயில் பா.ஜ.கவை கழற்றிவிட்டுவிட்டார். அங்கு பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. சொந்தங்கள் பிரிந்தபோதும் திடீரென தேர்தலில் பவார்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை கைவிட்டுவிட்டனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் கூறுகையில்,”புனேயில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சரத்பவாருடன் பேசியிருக்கிறோம். ஆனால் அஜித்பவாரும், சரத்பவாரும் கூட்டணி சேரப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது போன்று நடந்தால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார். அதேசமயம் அஜித்பவார் கட்சியுடன் கூட்டணி வைக்க சரத்பவார் கட்சியின் புனே தலைவர் பிரசாந்த் ஜக்தாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு அவர் கட்சியில் தனது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தாக்கரே சகோதரர்கள், பவார்கள் கைவிட்டுவிட்ட நிலையில் பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பிரகாஷ் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கையை முன்வைக்கிறார் என்கிறார்கள். இதனால் அவருடனும் கூட்டணி வைக்க முடியாத நிலையில் காங்கிரஸ் தனிமரமாக நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.