தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தோணித்துறை சுடுகாட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மார்ட்டின் ஸ்டான்லியின் உடல் அருகில் மது பாட்டில்கள் கிடந்ததால், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக முருகப்பெருமாள், நம்பிராஜன், கிதியோன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், நம்பிராஜன் என்பவர் ஸ்டான்லியின் நண்பர். இவர்தான் கார் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என மார்ட்டின் ஸ்டான்லியை சீவலப்பேரிக்கு வரச் சொல்லியுள்ளார். கைதான மூன்று பேரும், “மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தோம்” எனக்கூறி போலீஸாரை திசை திருப்பினர்.