விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது விளைபொருள் விற்பனை செய்யப்படாமல் போனதால் கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேதி என்ற இடத்தில் இருக்கும் மார்க்கெட்டிற்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட கொத்தமல்லி மற்றும் கடுகு மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு சுட்டெரிக்கும் வெயிலில் கிடந்தது.
மார்க்கெட்டில் காலையில் ஏலம் தொடங்கியது. ஏலத்தின் போது பணியில் இருந்த ஆய்வாளர் ராஜ்குமார் சர்மா அதிக குடிபோதையில் இருந்ததாகவும், சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ஒரு விவசாயியின் கொத்தமல்லி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5,700 ஏலம் போனபோது ஆய்வாளர் சீட்டில் ரூ.5,400 என்று பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிக்கும், ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ராஜ்குமார் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. அதிகமான விவசாயிகள் அதிகாலையில் தங்களது விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ஏலம் நிறுத்தப்பட்டதால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சிலர் வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து தங்களது விளைபொருட்களை கொண்டு வந்திருந்தனர். அவர்களில் ஸ்ரீபுர்சக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியும் இருந்தார். அவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்ய தனது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லியை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தார். ஏலம் நிறுத்தப்பட்டதால் அந்த விவசாயி மார்க்கெட்டிற்கு வெளியில் நின்று கொண்டு கைகூப்பி அதிகாரி மற்றும் வியாபாரிகளிடம் தங்களது பொருட்களை ஏலத்தில் விடும்படி கெஞ்சினார். அவர், “என் மகளுக்கு நாளை திருமணம். அந்த விழாவிற்கு எனக்கு பணம் தேவை. என் விளைபொருள் இன்று விற்கப்படாவிட்டால், திருமணம் பாழாகிவிடும்,” என்று கூறி அவர் கதறி அழுதார்.