60 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் இருந்தாலும், வரிதாரர்களைக் கண்காணிக்கும் அதிகாரம் வருமான வரித் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்களது தனியுரிமை பறிபோகும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் 1961-ம் ஆண்டு சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலும், காலத்துக்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலும் இந்தப் புதிய வருமான வரி சட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. குறைக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள், எளிய மொழி, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, திருத்தப்பட்ட வரி கணக்கைத் தாக்கல் செய்ய 4 ஆண்டுகள் வரை வாய்ப்பு ஆகிய அம்சங்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன. ஆனால், எளிமை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்குப் பின்னால், வரிதாரர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
நடைமுறையில் இருந்துவந்த பல விதிமுறைகள் மாற்றப்பட்டதால், குழப்பங்கள் பல ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வரிதாரர் தரப்பிலும், வருமான வரித்துறை தரப்பிலும் பல முரண்பாடுகள் நிகழலாம். இத்தகைய சூழலில், புதிய வருமான வரி சட்டத்தில் தனிநபர்களின் பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் அதிகாரம், வருமான வரித் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘வங்கிப் பரிவர்த்தனைகள், பங்கு முதலீட்டு லாபம், கிரிப்டோ வருமானம், வெளிநாட்டுச் சொத்துகள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டுவருவதற்கும், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்த அதிகாரம் உதவும்’ என்று கூறப்படுகிறது. ஆனால், வரிதாரர்களின் தனிப்பட்ட தகவல்களும் இதன் மூலம் அறியப்படும் ஆபத்து உள்ளது.
மேலும், இந்தப் புதிய சட்டத்தில் அபராத விதிகளும் கடுமையாகியுள்ளன. தவறான தகவல் பதிவாகி இருந்தால் 50% அபராதமும், முறைகேடு செய்யும் நோக்கத்தோடு தகவல் மறைக்கப்பட்டிருந்தால் 200% அபராதமும் விதிக்கப்பட உள்ளது. ஆனால், எது தெரியாமல் நடந்த பிழை, எது திட்டமிட்ட ஏய்ப்பு என்பது முழுக்க முழுக்க வருமான வரித் துறையின் முடிவே. இது, அதிகார துஷ்பிரயோகத்துக்கான வாய்ப்பை உருவாக்கும். முக்கியமாக, வரிதாரர்களின் நியாயத்தைப் பேசவும், முறையிடவும் இந்தப் புதிய சட்டத்தில் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள்.
மொத்தத்தில், அரசு மற்றும் அதிகாரிகளின் அதிகாரம் வலுப்பெறுகிறது. வரிதாரர்கள் தரப்பு நியாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசின் நோக்கம் வரி நடைமுறையை எளிமைப்படுத்துவதுதான் எனில், வரிதாரர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் கருத்தில் கொண்டே சட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. என்ன செய்யப் போகிறது அரசு?
– ஆசிரியர்