நாணயம் விகடன் இதழின் தீவிர வாசகர் நான். 80, 90-களில் இருந்தே ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடனின் தீவிர ரசிகன். 2015-க்குப் பிறகு நாணயம் விகடனின் தீவிர வாசிப்பாளராக ஆனேன். இதற்கு முக்கியக் காரணம் என் நண்பர் ராஜேஷ்கண்ணா என்பவர் தான். வழக்கறிஞராக இருக்கிறார் அவர். தினமும் நடைபயிற்சியின் போது நிதி நிர்வாகம் பற்றித் தெரிந்துகொள்ள நாணயம் விகடன் இதழை அவர்தான் வாசிக்கச் சொல்லி அறிமுகம் செய்தார்.
ஜனவரி 2015 முதல் இன்று வரை நாணயம் விகடனை புத்தக வடிவிலும், டிஜிட்டலிலும் வாசித்து வருகிறேன். நிதி மேலாண்மை பற்றி பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் அருமையான கட்டுரைகள் இதில் அமைந்துள்ளன. தொடர்ந்து வாசித்ததன் மூலம், இன்று சுமார் ரூ.70 லட்சத்துக்கும் மேலாகச் சேமித்து வைத்துள்ளேன்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்குப் பெரிய எடுத்துக்காட்டு எஸ்.ஐ.பி இன்வெஸ்ட்மென்ட் என்பதை நாணயம் விகடன் இதழ் மூலம் புரிந்துகொண்டு, அதைச் செயல்படுத்தி முதலீட்டில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றிக்கு நாணயம் விகடனும், என் நண்பரும் முக்கியமான காரணம். நாணயம் விகடனின் 2015-க்கு முந்தைய இதழ் களின் மிகச் சிறந்த கட்டுரைகளை நகல் எடுத்து புத்தக வடிவமாக்கி வைத்திருந்த அவர், அதை எனக்குப் படிக்கத் தந்தார். அதன்மூலம், பழைய இதழ்களில் இருந்தும் நிதி மேலாண்மை குறித்த நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
எனது இலக்கு இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்பதுதான். இந்த இலக்கை நிச்சயம் எட்டிவிடுவேன் என்ற முழு நம்பிக்கை உண்டு. நாணயம் விகடனுக்கு என் நன்றி..!
– என்.லோகநாதன், கோவை