ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை தாலிபான் அரசு செய்து இருக்கிறது. அதாவது குடும்ப வன்முறையில் குடும்ப ஆண்கள் தங்களது மனைவி அல்லது குழந்தைகளை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் நபரைப் பொறுத்து தண்டனையும் மாறுகிறது.
இதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு அந்நாட்டு இஸ்லாமியக் குழுவின் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாடா கையெழுத்திட்டுள்ளார். குற்றவாளி “சுதந்திரமானவரா” அல்லது “அடிமை”யா என்பதைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை அடிக்கும்போது காயம் தெரியாமலும், எலும்பு முறியாமலும் அடிக்கவேண்டுமாம். அதேசமயம் ஆபாசமான வன்முறை சம்பவங்களில் பெண்களுக்கு கணவன் எலும்பு முறிவுகள் அல்லது காயங்களை ஏற்படுத்தினால், கணவருக்கு 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேலும், நீதிமன்றத்தில் பெண் துஷ்பிரயோகத்தை வெற்றிகரமாக நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஆண் குற்றவாளி என அறிவிக்கப்படுவார். பெண் தனது காயங்களை முழுமையாக மூடிக்கொண்டு நீதிபதியிடம் காட்ட வேண்டும். நீதிமன்றத்திற்கு வரும்போது அவரது கணவர் அல்லது ஒரு ஆண் உதவியாளரும் அவருடன் வர வேண்டும். அதேசமயம் கணவரின் அனுமதி இல்லாமல் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றால் அப்பெண்ணிற்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானில் ஆட்சியை பிடித்த தாலிபான் அரசாங்கம் அண்மையில் அங்கீகரித்த தீமையை தடுத்தல் மற்றும் நற்பண்புகளை மேம்படுத்துதல் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் ஆப்கான் சமுதாயம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்டனைகளும் மாறுபடுகிறது. உலமாக்கள், மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், கீழ் மட்டத்தினர் என்று பிரிக்கப்பட்டுள்ளனர்.