பா. ரஞ்சித் இப்போது ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
அப்படத்தை முடித்த கையோடு ‘வேட்டுவம்’ படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் ‘சார்பட்டா பரம்பரை 2’, ‘பிர்சா முண்டா’ என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன.
இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா….

ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.
முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு ‘வேட்டுவம்’ படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘சார்பட்டா பரம்பரை 1’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘காந்தா’ ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித்.
சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!