Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" – பொன்னம்பலம் பேட்டி

Spread the love

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, கடந்தாண்டு மேலுமொரு சிகிச்சை நடந்திருந்தது.

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

கடந்த ஆண்டு “விரைவில் நான் குணமடைந்து திரும்பி வருவேன். ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சமீபத்தில், வீல் சேரில் அமர்ந்தவாறே இவர் நடனமாடிய காணொளி பார்ப்போர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இப்போது எப்படி இருக்கிறார்? சிகிச்சை முடிந்துவிட்டதா? என்பதை கேட்பதற்கு நடிகர் பொன்னம்பலத்தைத் தொடர்பு கொண்டோம்.

நம் அழைப்பை எடுத்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு பேசத் தொடங்கினோம். நம்மிடையே பேசியவர், “என் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆபரேஷனும் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சிடுச்சு.

அதுல எந்தப் பிரச்னையும் இல்லை. நான் ஸ்டண்ட்மேனாகவும் இருந்திருக்கேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டண்ட்ஸ் பண்ணியிருக்கேன். அது ஏற்படுத்திய தாக்கம்தான் இது.

சமீபத்தில் என்னுடைய சகோதரி மறைந்திருந்தாங்க. அப்போ துக்கம் தாளாமல் மேளத்துக்கு ஆடியிருந்தேன். அதைப் பலரும் எடுத்துப் போட்டு ஏதேதோ சொல்லத் தொடங்கிட்டாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை.

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

என்னுடைய அக்கா மறைந்த தகவலை எனக்கு மெதுவாகத்தான் சொன்னாங்க. குறைவான நேரம் மட்டுமே இருந்ததால வெளியில் யாருக்கும் எதுவும் சொல்லல. நானே அக்காவுக்கு இறுதிச் சடங்கு செய்திட்டேன்.

நான் வீல் சேர்ல இருக்கிறதைப் பார்த்துட்டு, என்னுடைய செயல்களை நேரடியாகப் பார்த்த மாதிரி பலரும் பல கதைகளை சொல்லிட்டிருக்காங்க. நான் ஷூட்டிங் ஸ்பாட்ல உட்கார்ந்து மது அருந்துவேன்னு சொல்றாங்க.

கே.எஸ். ரவிக்குமார்ல இருந்து ஷங்கர் வரைக்கும் பெரிய இயக்குநர்களோடு நான் பணியாற்றியிருக்கேன். ஆதாரத்தோடு சொன்னா ஏத்துக்கலாம். சிலர் வாய்ப்பு கிடைக்காததாலயும், வாய் சும்மா இருக்காததாலயும் ஏதேதோ பேசணும்னு பேசிட்டு இருக்காங்க.

நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும். வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை. நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி பலர் பேசிட்டு இருக்காங்க. வேலை வெட்டி இல்லாமல்தான் அதை அவங்க பேசிட்டு இருக்காங்க.

நீங்களே நான் பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட பேட்டி எடுங்க. நான் எவ்வளவு உழைப்பேன், எத்தனை மணிக்கு ஷூட்டிங் வருவேன், கை கால்களை உடைச்சுக்கிட்டாலும் எப்படி சிரத்தை கொடுப்பேன்னு அவங்க உண்மையைச் சொல்வாங்க.

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

நிறைய பேர் இப்போ எனக்கு உதவி செய்திட்டு இருக்காங்க. எல்லோரும் எனக்குத் தெய்வங்கள்தான். சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ்னு பலரும் எனக்கு உதவி பண்ணினாங்க. வெளில பேசுற மாதிரி நான் தவறானவனா இருந்தா இத்தனை பேர் எனக்கு உதவி செய்வாங்களா?

இன்னைக்கு வரைக்கும் உழைச்சு சாப்பிடுறதாலதான் ஆண்டவன் எனக்கு உயிரைத் தந்து வச்சிருக்கான். கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்.

சில தேவைகள் இருக்கு. சில விஷயங்கள் நடந்ததும் வெளிநாட்டுக்குப் போய் ரெடி பண்ணிட்டு வந்திடுவேன். ஜெய் ஸ்ரீ ராம்!” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *