2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் ‘The Girlfriend’ படம் வெளியாகியிருந்தது. இதனிடையே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது.

இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை.
சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் விஜய் தேவரகொண்டா உடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “திருமணம் பற்றிய தகவலை நான் இப்போது உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை.
அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் விஜய் தேவரகொண்டாவிடம் வேலை விஷயமாக நிறைய பேசமாட்டேன்.
80 சதவிகித நேரம் வேலையைப் பற்றி நான் வீட்டில் பேச மாட்டேன். வேலை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் எனக்கு மனதில் சுமையாக இருந்தால், மட்டும் ஆலோசனைக்காக விஜய் தேவரகொண்டாவிடம் கேட்பேன்.
நான் வேலைக்கு 100 சதவிகிதம் கொடுப்பவள், ஆனால் வீட்டில் இருக்கும்போது வேலையை பற்றி பேச மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.