தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில் ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. அதோடு அனில் அம்பானியின் மும்பை வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தியது. அனில் அம்பானியை டெல்லிக்கு வரவைத்து விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
அனில் அம்பானியின் மனைவி தினா அம்பானியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் தினா அம்பானி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அனில் அம்பானியின் மும்பை பாலிஹில் வீட்டை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இந்த வீடு மொத்தம் 17 மாடி கொண்டது ஆகும்.
அதன் மதிப்பு ரூ.3,700 கோடியாகும். முன்னதாக இதே சொத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியாக 473 கோடி சொத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இப்போது முழு வீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையும் சேர்த்து அமலாக்கப்பிரிவு இது வரை அனில் அம்பானிக்கு சொந்தமான 15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து இருக்கிறது.
மும்பை பாந்த்ராவில் உள்ள 17 மாடி வீட்டை அனில் அம்பானி குடும்பம் டிரஸ்ட்டிற்கு சொந்தமானது என்று காட்டி இருந்தார் என்றும், இதன் மூலம் அந்த வீடு அனில் அம்பானிக்கு சொந்தமானது கிடையாது என்று காட்டுவதற்கு முயற்சி செய்திருந்தனர் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சொத்துக்களை அறக்கட்டளையின் கீழ் கொண்டு செல்வதன் மூலம் அவற்றை பாதுகாக்க முயற்சி நடந்துள்ளது என்றும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.