பெண் வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு அல்லது தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது இப்போது வழக்கமாகி இருக்கிறது. மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. இதன் மூலம் பெண் வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக தங்களது பக்கம் திருப்பிவிடலாம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. இப்போது அடுத்த இரண்டு மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் தமிழ்நாட்டில் மாநில அரசு பெண்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்துள்ளது.
அஸ்ஸாம் அரசு ஏற்கனவே பெண்களுக்கு மாதம் ரூ.1,250 கொடுத்து வருகிறது. தற்போது ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான தொகைகளை ஒன்றாக சேர்த்து, அதோடு மேலும் 5 ஆயிரமும் சேர்த்து ரூ.9 ஆயிரத்தை 40 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளது.
வங்கியில் வரவு வைக்கப்பட்ட பிறகு கவுகாத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் பயனாளிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “‘பாஜக தொடர்ந்து மூன்றாவது ஆட்சியை பிடித்தால் மிகச் சிறந்த நாட்கள் வரும்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளையும், ஒரு கிலோ உப்பு, சர்க்கரை, பருப்பு மற்றும் கடுகு எண்ணெய் மற்றும் 500 கிராம் தேயிலைஆகியவற்றையும் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்”என்று அவர் உறுதியளித்தார். அதோடு தற்போது நலத்திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிப்பதாகவும், இதனை இளைய தொழில்முனைவோருக்கு விரிவுபடுத்துவதாகவும் சர்மா உறுதியளித்தார்.
தேர்தலுக்காக இதுபோன்று பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசிய சர்மா,” 2020 இல் தொடங்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் ‘ஒருனோடோய்’ திட்டம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் நோயாளிகளைக் கொண்ட குடும்பங்கள், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த இதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெற ஏழு தகுதி தகுதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இது தேர்தலுக்காக மட்டும் இருந்தால் அனைவரும் இதில் சேர்க்கப்பட்டிருப்பார்கள். இவை இலவசங்கள் அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் இதைச் செய்து வருகிறோம். பெண்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றங்களைத் தொடங்கிய முதல் மாநிலம் அஸ்ஸாம்.” என்று சர்மா தெரிவித்தார்.