ஆர்.டி.ஐ சட்டத்தின் 4(2) பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா? “ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும், பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு ஆர்.டி.ஐ பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில், தாமாகவே முன்வந்து தகவல்களை இணையதளங்கள் வாயிலாக வெளியிட வேண்டும்.
அதாவது, நாம் கேட்பதற்கு முன்பே அரசு தகவல்களைப் பொதுவெளியில் போட்டுவிட வேண்டும் என்பதுதான் சட்டத்தின் அடிப்படை நோக்கம். அரசு தன்னுடைய எல்லா முடிவுகளையும், அதற்கான காரணங்களையும் இணையதளத்தில் ஏற்றிவிட்டால், ஆர்.டி.ஐ விண்ணப்பங்களால் நிர்வாகம் முடங்காது.
அப்போது நிர்வாகச் சுமை தானாகவே குறைந்துவிடுமே. எல்லாம் வெளிப்படையாக இருந்தால், மக்கள் ஏன் விண்ணப்பம் போட்டு, பணம் செலுத்தி, 30 நாட்கள் காத்திருக்கப் போகிறார்கள்?
நல்ல அதிகாரி திடீரென இடமாற்றம் ஆனால், அதற்கு ஊழல் அல்லது அரசியல் அழுத்தமா என்பதை மக்கள் அறிய வேண்டாமா? சேவைப் பதிவுகள், இடமாற்ற காரணங்கள் ‘நிர்வாகக் காரணம்’ என்ற பெயரில் மறைக்கப்பட்டால், ஊழல் செய்பவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. எனவே, ஆர்.டி.ஐ இல்லாமல் பொறுப்புக்கூறல் எப்படி சாத்தியமாகும்?.
நிர்வாகம் வேகமாகவும் திறமையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக ரகசியம் தேவை என்று அரசு கூறுகிறது. ஆனால், உண்மையான ஜனநாயகத்தில் ‘நிர்வாகத் திறன்’ என்பது ‘பொறுப்புக்கூறலுடன்’ பிணைக்கப்பட்டது.
எங்கே கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறதோ, அங்கே நிர்வாகம் ‘திறமையானதாக’ மாறாது, மாறாக ‘சர்வாதிகாரத் தன்மை’ கொண்டதாக மாறிவிடும். ஜனநாயகத்தைப் புரிந்துகொண்டவர்கள், வெளிப்படைத்தன்மை என்பது ஒரு இடையூறு அல்ல, அது ஒரு பாதுகாப்பு வளையம்” என்றார் அழுத்தமாக.