நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று ரப்பர் பேண்ட். செய்தித்தாள்களைச் சுருட்டி வைக்க, பணக்கட்டுகளை ஒன்றிணைக்க, ஹோட்டல் பொட்டலங்களைக் கட்டி வைக்க என இதன் அன்றாட பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை.
ஆனால், இந்த எளிய பொருளின் பின்னணியில் பலரும் அறியாத ஒரு சுவாரசியமான வரலாற்றுச் சம்பவம் உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் பெர்ரி (Stephen Perry) என்பவர் 1845, மார்ச் 17-ல்தான் இதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

1840-களின் முற்பகுதியில், லண்டன் மாநகரம் தொழில் புரட்சியின் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று ‘மெஸ்ஸர்ஸ் பெர்ரி அண்ட் கோ’ (Messrs Perry & Co).
இதன் நிறுவனர் ஜேம்ஸ் பெர்ரி, இரும்பு நிப்களைக் கொண்ட பேனாக்களைத் தயாரித்து ஐரோப்பா முழுவதும் பிரபலமானவராகத் திகழ்ந்தார். 1843-ல் அவர் இறந்த பிறகு, அவரது மகனான ஸ்டீபன் பெர்ரி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார்.
புதிய கண்டுபிடிப்புகளின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஸ்டீபன், தனது தந்தையின் தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்பினார். அந்தக் காலகட்டத்தில், வணிக நிறுவனங்களில் காகிதங்கள், ஆவணங்கள் மற்றும் கடித உறைகளை ஒழுங்காகச் சேர்த்து வைக்க சரியான வழியின்றி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதற்காக நூல்களையும் நாடாக்களையும் பயன்படுத்தினர், இது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதோடு நடைமுறைக்குச் சற்றே கடினமாகவும் இருந்தது. இந்தக் குறையைப் போக்க எளிதான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஸ்டீபன் ஆசைப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் ரப்பர் பயன்பாட்டில் இருந்தாலும், அது வானிலைக்கு ஏற்ப மாறக்கூடிய ஒரு பொருளாகவே இருந்தது. கோடையில் பிசுபிசுவென உருகியும், குளிர்காலத்தில் உறைந்து உடைந்தும் போனது.
ஆனால், 1839-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் குட்இயர் (Charles Goodyear) என்பவர் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்துச் சூடுபடுத்தும் ‘வல்கனைசேஷன்’ என்ற முறையைக் கண்டுபிடித்தார்.
பிரிட்டனில் தாமஸ் ஹான்காக் (Thomas Hancock) என்பவர் இதை மேலும் மேம்படுத்தி அதற்கான உரிமத்தைப் பெற்றார். வல்கனைஸ் செய்யப்பட்ட ரப்பர் எலாஸ்டிக் தன்மையுடன், எத்தகைய வெப்பநிலையிலும் உறுதியாக இருந்தது. இதைப் பார்த்த ஸ்டீபன் பெர்ரிக்கு ஒரு மிகச்சிறந்த யோசனை உதித்தது.
தாமஸ் ஹான்காக்கிடம் இருந்து வல்கனைஸ் செய்யப்பட்ட ரப்பரைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை ஸ்டீபன் பெற்றார். ரப்பரை ஒரு நீண்ட வெற்றிடக் குழாய் (Hollow tube) போன்று மாற்றி, அதைச் குறுக்குவாட்டில் சிறுசிறு வளையங்களாக வெட்டினார்.
அப்படி வெட்டப்பட்ட அந்தச் சிறிய ரப்பர் வளையங்கள், காகிதங்களை ஒன்றிணைத்து வைக்கச் சிறப்பாகச் செயல்பட்டன. அவற்றை எவ்வளவு இழுத்தாலும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பின.
இப்படித்தான் உலகின் முதல் ‘ரப்பர் பேண்ட்’ உருவானது. தனது சக பொறியாளரான தாமஸ் பர்னபாஸ் டாஃப்ட் (Thomas Barnabas Daft) என்பவருடன் இணைந்து, 1845, மார்ச் 17ம் தேதி பிரிட்டனில் காப்புரிமையைப் பெற்றார் ஸ்டீபன் பெர்ரி.

ஆரம்பத்தில் வெறும் காகிதங்கள் மற்றும் கடித உறைகளை இணைக்க மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட ரப்பர் பேண்ட், அதன் நெகிழ்வுத்தன்மை மற்றும் நீடித்த உழைப்பால் பல துறைகளுக்கும் பரவத் தொடங்கியது.
ஸ்டீபன் பெர்ரியின் இந்த எளிய கண்டுபிடிப்பு, இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பலவிதமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய ரப்பர் வளையம், நேரத்தை மிச்சப்படுத்தி, வேலைகளை எவ்வளவு எளிதாக்கியுள்ளது என்பதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் எல்லோருக்கும் வியப்பிற்குரியதுதான்.