குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர்.
இக்கும்பல்தான் பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா, மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோரை சுட்டுக்கொலை செய்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் சில பெண்களும் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதுவும் நேகா (எ) குஷ்னுமா அன்சாரி என்ற பெண் பிஷ்னோய் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை நிர்வகிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேகா குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர்.

அப்பெண் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. அழகு நிலையத்தை பெயருக்கு நடத்திக்கொண்டு முழுக்க போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் பிரதானமாக ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து நேகாவின் நடவடிக்கையை போலீஸார் கண்காணித்து வந்தனர். நேகா டெல்லியின் மஹிபல்பூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தி நேகாவை கைது செய்தனர். அவர் கைது செய்யப்படும்போது அவரிடம் கணிசமான அளவு போதைப்பொருள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.