கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது.
இதில் ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925
பெண் வாக்காளர்கள் – 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்கள் – 7,617
SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.
https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம்.
அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம்.

மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.
பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.