பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா?
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ (Dasypeltis gansi) எனும் பாம்பு தான் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் தன்மையை கொண்டவையாக உள்ளது.
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் மெலிந்த உடலமைப்பையும், சிறிய தலையையும் கொண்டவையாக உள்ளன. இந்த பாம்பு தன்னைவிட பல மடங்கு பெரிய முட்டைகளை எப்படி விழுங்குகிறது என்பதுதான் ஊர்வன ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

from pixabay
பொதுவாக வேட்டையாடும் பாம்புகளுக்கு இருக்கும் பெரிய தலை அல்லது தாடை அமைப்பு இதற்கு இல்லை. மாறாக இதன் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளதாம்.
ஆய்வுகளின்படி, இந்த பாம்பின் வாய் பகுதி, அதன் உடல் அளவை ஒப்பிடும்போது சாதாரண பாம்புகளைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை விரிவடையும் தன்மையுடையது. இந்த பாம்பு பறவைகளின் கூடுகளைத் தேடிச் சென்று முட்டையை விழுங்குகிறது.
முட்டை தொண்டைக்குள் சென்றவுடன் பாம்பின் முதுகெலும்பில் உள்ள கூர்மையான எலும்பு அந்த முட்டையின் ஓட்டை உடைக்க உதவுகின்றன. பின்னர் முட்டையின் உள்ளே இருப்பதை மட்டும் உறிஞ்சிவிட்டு உடைந்த ஓட்டை அப்படியே வெளியே துப்பிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.