பீகாரில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க அதிக இடங்களை வென்றிருந்த போதிலும், 10வது முறையாக நிதீஷ் குமார் முதல்வர் பதவியை ஏற்றார். ஆனால் முதல்வர் பதவியை கொடுத்த நான்கு மாதத்தில் அப்பதவியை பா.ஜ.க பறிக்க இருக்கிறது.
75 வயதாகும் நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை பா.ஜ.கவிற்காக விட்டுக்கொடுக்க இருக்கிறார். அதேசமயம் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகிறார். இதற்காக இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் முன்னிலையில், பாட்னாவில் இன்று மாநிலங்களவைக்கான வேட்புமனுவை நிதிஷ் தாக்கல் செய்ய இருக்கிறார்.

அவருடன் பாஜக தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா உள்ளிட்ட நான்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.
இன்று மாநிலங்களை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். 2020 மற்றும் 2025ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் நிதீஷ் குமார் முதல்வர் பதவியை ஏற்ற பா.ஜ.க அனுமதித்தது. இப்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றபோது பா.ஜ.கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.