இதில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பாக வெளியாகும் கருத்துக்கள் குறித்து பேசினார். அவர் தனது உரையில், “எங்களது கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்” என சரத் பவார் கட்சியை முறைமுகமாக சாடினார்.
கட்சியின் மற்றொரு தலைவரான சுனில் தட்கரே,” 2004-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை விட அதிக இடங்களை தேசியவாத காங்கிரஸ் பெற்றது. அப்படி இருந்தும் அஜித் பவாருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் 13 கோடி மகாராஷ்டிர மக்கள் ஒரு சிறந்த முதலமைச்சரை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது”என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் ஒன்றாக இணைப்பது குறித்து அஜித் பவார் உயிரோடு இருந்தபோது சரத் பவார் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து அஜித் பவார் இறந்த பிறகு சரத்பவார் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அஜித் பவார் இறந்துவிட்ட நிலையில் இரு அணிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அஜித் பவார் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் இரு கட்சிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே அஜித் பவாரின் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மீது சரத் பவாரின் பேரன் ரோஹித்பவார் மும்பை போலீஸில் புகார் கொடுக்க சென்றார். ஆனால் போலீஸார் விமான நிறுவனம் மீது புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதற்கு மிகப்பெரிய தலைவர் ஒருவரின் குறுக்கீடு இருப்பதாக ரோஹித் பவார் குற்றம் சாட்டி இருக்கிறார். ரோஹித் பவார் புனேயில் உள்ள சி.ஐ.டி போலீஸில் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.