3. ஒரு உணவுத் தொழில் நிறுவனத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல முதலீடு மிக அவசியம். உங்கள் நிதிப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
கொல்லிமலை அடிவாரத்தில் எங்கள் தோட்டம் உள்ளது. என் தந்தை அப்பா பரமேஸ்வரன் அறிவுரைப்படி சொந்தத் தோட்டத்திலேயே தொழிலைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தந்தை கொடுத்த 2.5 லட்ச ரூபாய் மற்றும் 10 லட்ச ரூபாய் வங்கி கடன் மூலம் இயந்திரங்களை வாங்கிப் பணியைத் தொடங்கினேன்.
வெளி முதலீட்டாளர்களிடம் செல்லாததால், நிறுவனத்தின் முழு அதிகாரம் இன்றும் என்னிடமே உள்ளது. இது விரைவான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது. பி2பி வர்த்தகத்தில் சில நேரம் உடனுக்குடன் முடிவு எடுக்க இது உதவுகிறது. சில சமயம் கூட்டாளிகள், முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தால் கொஞ்சம் காலதாமதமாகும். ஆனால் நிறுவனத்தின் முழு அதிகாரமுமே என்னிடம் உள்ளதால் எனக்கு உபயோகமாக உள்ளது
பல சமயங்களில் எங்களது Even More Foods நிறுவனம் திவாலாகும் நிலைக்குக் அருகில் சென்றிருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் சம்பளத்தை ஒருபோதும் நிறுத்தியதில்லை. வங்கிக் கடன்களைச் சரியாகத் திருப்பிச் செலுத்தியதால் வங்கியின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. அன்று 1,000 சதுர அடியில் தொடங்கிய நிறுவனம், 16,000 சதுர அடியாக வளர்ந்துள்ளது.
அனுபவத்தின் மூலம் எப்போது இயந்திரங்களை வாங்க வேண்டும், எப்போது லாபம் எடுக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. பிற நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் (White Labeling) பணியைச் செய்வதால், மிகக் குறைந்த லாப வரம்பிலேயே (7% – 12%) இயங்கி வருகிறோம். இன்னொரு புறம் நிதிக்கு எங்களது நண்பர்களிடம் கடன் வாங்கினோம். நல்ல வட்டி சரியான நேரத்தில் திருப்பி தந்ததில் அவர்களுக்கும் திருப்தி. எனவே பணம் எப்போது தேவை என்றாலும் ஏதோ ஒரு வகையில் வாங்கிட முடிகிறதும் எனக்கும் உதவியாக இருக்கிறது
முக்கியமா இந்தியாவில் எந்த மூலையில் இயந்திர கண்காட்சி என்றாலும் போய் பார்ப்பேன் அதை வாங்கி வந்து இங்கே முயலுவேன். அதற்கு வங்கிகளும் எனக்கு துணை நிற்கின்றன.

இப்போது சில பொறியியல் பணிகளுக்கு என்றே தனி குழுவே வைத்திருக்கிறேன் என்பதும் முக்கியமானது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் பணத்தை மேலாண்மை செய்து, திவலாகும் நிலைக்கு அருகில் சென்று மீண்டு வந்திருக்கிறேன்.
4. மத்திய, மாநில அரசுகளின் சிறுதானிய இயக்கங்கள் மற்றும் கடனுதவித் திட்டங்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவியாக உள்ளன?
அரசின் திட்டங்களில் பல நன்மைகள் உள்ளன, அவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மாவட்டத் தொழில் மையம் (DIC) மூலம் வழங்கப்படும் 25% மூலதன மானியம் (Capital Subsidy) மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agri Infra Fund) மூலம் கிடைக்கும் 3% வட்டி மானியம் ஆகியவை மிகப்பெரிய பலம். ஆரம்பத்தில் சில தவறான வழிகாட்டுதலால் இவற்றைப் பயன்படுத்தத் தயங்கினேன், ஆனால் சரியான தகவல்களைத் திரட்டி இப்போது முறையாகப் பயன்படுத்தி வருகிறோம். மானியத்திற்காக மட்டுமே தொழிலைத் தொடங்கக்கூடாது, அது ஒரு ஊக்கியாக (Accelerator) மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.