மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.
துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,” அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும்.