அந்த பணத்தில் தொழில் தொடங்கிய சாவ்ஜி கம்பெனியில் முழு கவனத்தையும் செலுத்தி வேலை செய்தார். இதனால் அவரது கம்பெனி மளமளவென வளர்ச்சி அடைந்தது. இன்றைக்கு அவரது கம்பெனி வருடத்திற்கு 15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறார்கள். தொழிலாளர்களுக்கு என்ன வேண்டுமானாலும் உடனே அவர்களுக்கு செய்து கொடுக்கிறார். அதோடு வறட்சி பாதித்த கிராமங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தொழிலாளர்களுக்கு இந்த அளவுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் கொடுப்பது குறித்து ஒரு முறை அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ”ஊழியர்கள் பாதுகாப்பாக உணரும்போது, அவர்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். நிறுவனத்தை உருவாக்க உதவிய தொழிலாளர்களுடன் கம்பெனியின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எனது சொந்த லாபத்தை குறைத்துக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தனது தொழிலாளர்கள் 1260 பேருக்கு கார் கொடுத்துள்ளார். இது தவிர 400 பேருக்கு சொந்த வீடு வாங்கிக்கொடுத்து இருக்கிறார். கடந்த 30 ஆண்டில் தனது கம்பெனி தொழிலாளர்கள் அனைவருக்கும் கார், வீடு கொடுத்து அவர்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றி வருகிறார். அவர் கடந்த புத்தாண்டையொட்டி வெளியிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் பதில்,”வெற்றி என்பது சத்தத்தால் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக நிலைத்தன்மை, நோக்கம் மற்றும் மதிப்புகளால் அளவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் தொழிலாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால் தொழிலாளர்களும் மிகவும் உற்சாகமாகவும், விசுவாசமாகவும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களுக்கு கட்டடங்களில் வீடு வாங்கிக்கொடுத்துவிட்டு அதற்காக மாதாந்திர கடன் தவணை தொகையை தனது கம்பெனி பணத்தில் இருந்து கட்டிக்கொண்டிருக்கிறார்.