இப்பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “‘மும்பை, தானே மாநகராட்சி தேர்தலுக்கு தனித்தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைத்து வார்டு பங்கீடு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மும்பை மாநகராட்சி வார்டு பங்கீடு குறித்து இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். பேச்சுவார்த்தையில் தலைவர்கள் இழுப்பை நிறுத்தும்படி ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார். இப்பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் உள்ளூர் தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள்”என்றார்.
மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி தேர்தலிலும் தங்களது கட்சிக்கு கணிசமான வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி இருக்கிறார். அதோடு மும்பை, தானேயில் முந்தைய தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை மாநகராட்சியை கடந்த முறையே பா.ஜ.க குறிவைத்தது. ஆனால் கடந்த முறை சிவசேனா ஒரு சில வார்டுகள் அதிகமாக பெற்றதால் மேயர் பதவியை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.