தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாருதி.
ஆனால், அதில் முட்டி மோதி கால்வாசிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். காமெடிகள் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், பெரும்பான்மையான இடங்களில் சிரிப்பொலி என நினைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் காட்சிகள் பெரும் சுமைகளைத் தரும் சோதனைக் கற்கள்.
முதல் பாதி திரைக்கதை, தேவையின்றி எக்கச்சக்க ‘ஹேர்பின்’ வளைவுகளில் வளைந்த பின், மிகப் பொறுமையாகக் கதைக்குள் செல்வது, தலைச்சுற்றலோடு பெரும் அயர்ச்சியை உண்டாக்குகிறது ராஜா சாப்!
மூன்று கதாநாயகிகள், அவர்களுடன் கதாநாயகன் செய்யும் ரொமான்ஸ், அவர்களுடனான டூயட் பாடல்கள் ஆகியவை திரைக்கதையோடு பொருந்தாத ஒன்றாகக் கடைசி வரை தத்தளிக்கின்றன.
அரண்மனைக்குள் குடியிருக்கும் பேய், அதற்குப் பின்னுள்ள ஃப்ளாஷ்பேக், அங்கு நடக்கும் திகில் கேம்கள் ஆகியவற்றில் பழங்காலப் பேய்ப் படங்களின் சுவடுகளே நிரம்பியிருக்கின்றன.
நாயகனின் வீர தீரச் செயல்களை நிரூபிக்கும் ‘வாழ்வா – சாவா’ க்ளைமாக்ஸும் ஒரு வட்டத்திற்குள்ளாகவே ரவுண்டு அடித்துச் சலிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் முதலையுடனான ‘சிங்கிள்ஸ்’ சண்டையெல்லாம் டூ மச் சாப்!
இரண்டாம் பாதியில் சொல்லப்படும் ஹிப்னாடிஸம் விஷயங்களில் முழுமையும், தெளிவான கதைசொல்லலும் இல்லாதது பெரும் பல்வேறு குழப்பமான கேள்விகளை எழுப்புகின்றன. அத்தோடு, இந்த டோலிவுட் சினிமா எழுப்பும் லாஜிக் கேள்விகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை பாஸ்!