தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் பாதிப்பு, அவ்வப்போது மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து ஓடைகள் வழியாக திடீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக செண்பகத்தோப்புப் பகுதியில் உள்ள மீன்வெட்டிபாறை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திடீர் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. அதேபோல், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். பெய்து வரும் கனமழையால் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சதுரகிரி செல்லும் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சதுரகிரி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.