திருநர் உரிமை பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) நிறைவேற்றப்பட்டது. அதில், முக்கிய அம்சமாக, திருநர் தங்களின் பாலினத்தை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, மருத்துவக் குழுவினரே, திருநர்களின் பாலின அடையாளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம் மற்றும் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் புதன்கிழமை (மார்ச் 26) மாலை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த மசோதா “பிற்போக்கானது” என்று விமர்சித்துள்ள அவர்கள், “எங்களைக் கலந்தாலோசிக்காத ஒரு கவுன்சிலில் நீடிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட கல்கி சுப்பிரமணியம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், “சமீபத்திய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதம், நான் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.