துவாலு சந்திக்கும் பிரச்னைகள்
சுமார் 11,000 மக்கள் மட்டுமே துவாலுவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் மீன்பிடிப்பு, விவசாயம் மற்றும் அரசாங்க வேலைகளைச் சார்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டம் உயர்வதால், கடல் நீர் குடிநீரில் ஊடுருவி உப்புக் கலப்பது, விவசாய நிலங்கள் சேதமடைவது போன்ற கடுமையான பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மேலும், புயல்கள் மற்றும் பெரும் அலைகளால் சில பகுதிகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்காலத்தில் துவாலு மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

உலகின் முதல் ‘டிஜிட்டல் நாடு’
இந்த அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துவாலு ஒரு அதிசயமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. தங்கள் நாடு அழிந்தாலும், அதன் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் முயற்சியில் துவாலு ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டின் நில வரைபடங்கள், அரசு ஆவணங்கள், சட்டங்கள், மக்களின் பதிவுகள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவை 3D மாடல்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.