‘நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்’ – வேங்கைவயல் சம்பவத்தில் ஐகோர்ட் எச்சரிக்கை

1348853.jpg
Spread the love

மதுரை: ‘வேங்கைவயல் சம்பவத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்’ என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ‘வேங்கைவயல் சம்பவத்துக்கு இரு தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினை தான் காரணம். இந்த வழக்கில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அனைத்தும் அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெறாமல் தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது மாற்றி மாற்றி பேச என்ன காரணம்?’ என கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில், ‘பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டறியக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவாக பதிவு செய்தார். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையெனில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கை எதிர் கொள்ளலாம் எனறு கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *