டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. 5 நாட்கள் தாமதத்திற்கு பிறகு நேற்று தாயகம் புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித்சர்மா, பாண்ட்யா ஆகியோர் வெற்றிகோப்பையுடன் உற்சாகத்தில் நடனம் ஆடினர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடி அளித்த சிறப்பு விருந்தில் கலந்துகொண்டனர்.
பிரம்மாண்ட பாராட்டு விழா
மோடியிடம் வெற்றி கோப்பையைக் காண்பித்து இந்திய வீரர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி நீண்ட நேரம் கலந்துரையாடினார். பின்னர் மதியம் அங்கிருந்து வீரர்கள் தாங்கள் தங்கி இருந்து ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை கிரிக்கெட் வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களுக்கு வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வான்கடே மைதானத்திற்கு திறந்த பஸ்சில் கிரிக்கெட் வீரர்கள் வெற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்தி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று மாலை முதலே வான்கடே மைதானத்தை சுற்றி உள்ள பகுதியில் ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதனால் மும்பை நகரமே ஸதம்பித்தது. நேரம் செல்ல செல்ல லட்சக்கணக்கான ரசிகர்கள் வான்கடே மைதான சாலையின் இருபுறமும் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே திக்குமுக்காடியது.
வீரர்கள் கோப்பையுடன் நடனம்
திறந்த பஸ்சில் கிரிக்கெட் வீரர்கள் ரோகித்சர்மா, கோலி, பும்ரா, பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தேசிய கொடியுடன் உற்சாகமாக கோப்பையுடன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர். இதனால் வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டனர்.வீரர்கள் கோப்பையுடன் நடனம் ஆடினர்.
இந்த வெற்றி ஊர்வலம் வாகனம் இரவு 8.45 மணியளவில் முடிந்து வான்கடே மைதானத்திற்குள் மக்கள் வெள்ளத்தல் தத்தளித்தபடி நுழைந்தது. ரசிகர்கள் ரோகித்சர்மா, கோலி, பும்ரா, பாண்ட்யா என ஒவ்வொரு வீரரின் பெயரையும் உரக்கச் சொல்லி உற்சாக குரல் எழுப்பினர். அதிலும், ‘ஹர்திக் பாண்டியா… ஹர்திக் பாண்டியா’ என்கிற பெயர்தான் ரசிகர்களின் கூட்டத்தில் விண்ணையே அதிரச் செய்தது. மேலும் சாலை முழுவதும் பாரத் மாதாகி ஜெய்’, ‘வந்தே மாதரம்‘ மற்றும் ‘இந்தியா இந்தியா’ என்ற முழக்கங்கள் தொடர்ந்து எதிரொலித்தன.
வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா
பாராட்டு விழா நடைபெறும் வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மாலை முதலே ரசிகர்கள் குவிந்ததால் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்கள் கோப்பையுடன் உற்சாக மாக நடனம் ஆடினர். இதனார் கிர்கெட் ஸ்டேடியமே அதிர்ந்தது. இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா நடந்தது. பின்னர் வீரர்களுக்கு மொத்தம் ரூ.125 கோடி பரிசுத்தொகை இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) வழங்கியது.
விமான நிறுவனம் கவுரவிப்பு
இந்திய அணியின் விஸ்தாரா விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்தனர். மும்பையில் இறங்கியதும் அந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமானத்திற்கு ஒதுக்கப்பட்ட அழைப்பு அடையாள எண்ணும் தனித்துவம் வாய்ந்தது ஆகும். அதன் எண் ‘UK1845’ என்பது விமானத்திற்கான அழைப்பு அடையாளமாக இருந்தது. இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்களைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படங்கள்…..