Vijay: "ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா?" – செல்லூர் ராஜூ விளக்கம்

Spread the love

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, “முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜக, தன் கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் எனப் பிதற்றுகிறார்.

போதை கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள்கள் விற்கப்படுகின்றன. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதிமுக கூட்டணிக்கு வரக் கூடிய கட்சிகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்கிறார்.

மக்கள் மனக் குமுறலோடு இந்த ஆட்சியை அகற்ற ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 2026-ல் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற கட்சிப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் பாஜகவுக்கும் அமித் ஷாவுக்கும் அடிமை என நீங்கள்தான் ஏதேதோ சொல்கிறீர்கள், 125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித் ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்தார்.

விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது. கூட்டணி பலத்தில்தான் திமுக இருக்கிறது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் திமுகவும் முதலமைச்சரும் இருக்க முடியுமா? அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் தன்னைப் பற்றி தானாகவே பெருமை பேசுகிறார். மக்கள் இந்த ஆட்சியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்களா?

தைரியம் இருந்தால், திமுக-வால் தேர்தலில் தனித்து நிற்க முடியுமா? மூவாயிரம் ரூபாய் கொடுத்தாலும் சரி, கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் சரி, திமுக வெற்றி பெற முடியாது. அவர்கள் பெருமை பேச ஒன்றுமில்லை. லேது லேது…

கூட்டணியைப் பற்றி, எங்கள் பொதுச் செயலாளரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக பலமிழக்கவில்லை. திமுகதான் பலமிழந்துள்ளது. பாமக-வில் நடப்பது உட்கட்சிப் பிரச்னை, அது தந்தை – மகன் விவகாரம் .

முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம் என்று சொல்வார்கள். அவரை விமர்சனம் செய்ததால்தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் வந்த கார் டயர் பஞ்சராகிப் போனதோ? அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அமித் ஷா மாபெரும் தலைவர், அவரது இயக்கம் மாபெரும் இயக்கம். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலையெல்லாம் அவர் செய்ய மாட்டார். எமனையே பார்த்தவர்கள் நாங்கள் யாருக்கும் எப்போதும் அடிபணிந்து போக மாட்டோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *