ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் வளைகுடா நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனியாளாக நின்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வேலை, படிப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளனர். ஆனால் போர் இப்போது ஈரானோடு நிற்காமல் துபாய், அபுதாபி, பஹ்ரைன், தோஹா, ஜோர்டான் போன்ற நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்களை பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். துபாயை சேர்ந்த ஒரு இந்தியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “‘நாங்கள் பிழைப்புக்காக இங்கு வந்தோம்.
இப்போது குண்டுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம். மோடிஜியும், இந்திய அரசும் எங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
90 லட்சம் இந்தியர்கள்
துபாய், அபுதாபியில் ஆயிரக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவம் மற்றும் எம்.பி.ஏ.படிக்கும் இந்திய மாணவர்கள் மத்திய அரசு தங்களை மீட்க வேண்டும் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர உதவி எண்களை அறிவித்து இருக்கிறது. துபாய் போன்ற உலகின் முன்னணி சுற்றுலா தலங்களில் கூட ஏவுகணைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் எந்நேரமும் தெருக்களில் சைரன்கள் ஒலிப்பதால் வெளிநாட்டினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.