அப்படி இருந்தும் விமானம் தொடர்ந்து தரையிறங்க வந்து கொண்டிருந்தது. 8.34 மணிக்கு பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விமானம் தரையிறங்கும் முதல் முயற்சி கைவிடப்பட்டு தொடர்ந்து வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. 8.40 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்றார். அதன் பிறகு 8.43 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஓடுதளம் நன்றாக தெரிகிறது என்றார்.
உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து 11வது நம்பர் ஓடுதளத்தில் தரையிறங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைத்த உடன் கடைசியாக விமானத்தில் இருந்து 8.44 மணிக்கு “Oh S**t… Oh S**t…” என்ற வார்த்தைதான் வந்தது. அதன் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் ஓடுபாதை 11 இன் இடதுபுறத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவில், வாசலுக்கு அப்பால் மோதி விபத்துக்குள்ளானது. அருகிலுள்ள கிராமத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் விமானம் வலதுபுறம் திரும்பி, நிலப்பரப்பில் மோதுவது பதிவாகி இருந்தது.
விமானம் முதலில் மரங்களில் மோதியதாகவும், பின்னர் கீழே விழுந்து தீப்பிடித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராமதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மூடுபனி காணப்பட்டது செயற்கை கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. மேலும் விமானநிலையத்தில் விமானங்களுக்கு ஓடுதளம் குறித்தும், காற்றின் வேகம் குறித்தும் தகவல் கொடுக்க நவீன வசதிகள் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்த அடையாளங்கள் மங்கிவிட்டதாகவும், ஓடுபாதை மேற்பரப்பில் சரளைக் கற்கள் இருந்ததாகவும், கடைசியாக ஓடுபாதை மறுசீரமைப்பு மார்ச் 2016 இல் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதன் பிறகு ஓடுபாதை மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.