இருப்பினும், அங்கிருந்து தப்பித்த அவர், 2011ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்குத் திரும்பினார். சிரியப் புரட்சி தொடங்கியவுடன் அது குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது நண்பர்களான அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஆகியோரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கொடூரமாக கொலை செய்ததை தொடர்ந்து மாத்யூ தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்கிறார்கள்.
கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி
இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஆவணப்படம் எடுப்பதைக் கைவிட்டு, ஆயுத குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க ஒரு அமைப்பை அவர் நிறுவினார். அவரிடம் நடத்திய விசாரணையில் உலகெங்கிலும் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக வான்டைக் பேசிய பல குரல் பதிவுகளை அவரது மொபைல் போனில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவர் மணிப்பூர் போன்ற பகுதிகளில் இத்தகைய பயிற்சிகளை வழங்கினாரா என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வான்டைக் தனது சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் காணொலிகள் மூலம் வெனிசுலா, மியான்மர், ஈரான் ஆகிய நாடுகளிலுள்ள கிளர்ச்சிக் குழுக்களில் பணியாற்ற வருமாறு உலகம் முழுவதிலுமுள்ள கூலிப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஆயுத குழுக்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும், அவர்களுக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் நவீன போர் தொழில்நுட்பங்களை வழங்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
உக்ரைனுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பதோடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உக்ரைனுக்கு பிடிக்கவில்லை. எனவே மாத்யூ மூலம் உக்ரைனின் சில அமைப்புகள் மூலம், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.