குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடையில் தோசை மாவு வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கன்ஷ்யாம் டைரி என்ற கடையில் ரெடிமேட் தோசை மாவை வாங்கிச் சென்றுள்ளார். அன்றிரவு அந்த மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட விமல் குமார், அவர் மனைவி பாவனா மற்றும் மூத்த மகள் மிஷ்டி ஆகியோருக்கு அடுத்த நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் மூன்று மாதக் குழந்தையான ராஹா, தோசை சாப்பிடவில்லை என்றாலும், மாவைச் சாப்பிட்ட தனது தாயின் தாய்ப்பாலைக் குடித்த உடனேயே உடல்நிலை மோசமடைந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி அன்று மூன்று மாதக் குழந்தை ராஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி அன்று நான்கு வயது சிறுமி மிஷ்டியும் உயிரிழந்தாள். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த அக்குடும்பம் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. தற்போது குழந்தைகளின் பெற்றோர் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.