“திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?” எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அவற்றின் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனை என்று கூறுவது நகைமுரணின் உச்சம் ஆகும்.
என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் நேற்று நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டும் என்றால் அது திமுக என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஊழலுக்கும், திமுகவுக்கும் பிரிக்க முடியாத பந்தம். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன.
திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது; இவற்றின் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் கூறி இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
1. ரூ.888 கோடி பணி நியமன ஊழல்
2. ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி
3. ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல்
4. ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல்
5. ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல்
6. ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல்
7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல்
8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல்
9. ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்
10. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல்