ஹிந்தி தெரியாவிட்டால் பேல் பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவிற்கு கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
நாடாளுமன்றத்தில் நான் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்திற்கான ரூ 2154 கோடி நிதியை மத்தி அரசு நிறுத்தி வைத்திருப்பது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன்.
அதில், தமிழ்நாட்டுக்கு ரூ 2154 கோடிகளை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் பகுதியாக ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்திற்கு எதிரானது இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா என்றெல்லாம் கேட்டிருந்தேன்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது என்று சிலாகித்து சமக்ரா சிக்சா அபியான் பற்றியும் விலாவாரியாக தெரிவித்துள்ளார்.
2023 – 24 இல் ரூ. 1876 கோடி தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது என்றும், 2024 – 25- க்கு ரூ. 4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருவதாகவும், மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படும் என்றும், எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை கற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் தொலைக்காட்சி பங்கேற்பாளர்கள் போலவே அமைச்சர்களின் நாடாளுமன்ற பதில்களும் அமைந்து வருகிறது என்பதன் வெளிப்பாடே இது. கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புவது, உண்மையை மறைத்து தகவல்களை தருவது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும்.