தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி போன்ற பகுதிகளில் புலி நடமாட்டம் அதிகமாக இருந்தபோது பெங்களூருவில் வசித்த கென்னட் ஆண்டர்சன் என்ற ஆங்கிலேய வேட்டையரைத்தான் அழைத்து வருவார்களாம். அவர் எழுதிய ‘ஆம்னி பஸ் ஆப் கென்னட் ஆண்டர்சன்’ என்ற நூலில் இப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி விலாவரியாகப் பதிவு செய்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயர்ந்த சிகரமான குதிராயன் பீக் பகுதியிலுள்ள ஏரியில் உள்ள இரட்டை ஆலமரத்தைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். அந்த இரட்டை ஆலமரம் இப்போதும் உள்ளது. புத்தகத்தில் படித்த ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் மொபைலை, இன்ஸ்டாகிராம், ரீல்ஸைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தை புத்தகஙகள் நமக்கு படம்போட்டு காட்டுகிறது. அதனால் புத்தக வாசிப்பை உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்கள் குழந்தைகளுக்கும் கடத்துங்கள்.
இணையத்தில் கிண்டில் என்ற ஒன்று வந்தபோது, இனி இங்குதான் புத்தகங்களை மக்கள் படிக்கப்போகிறார்கள், அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அவ்வளவுதான் என்றார்கள். இன்று கிண்டிலைத் தாண்டி மொபைலிலேயே அனைத்து புத்தகங்களும் வந்துவிட்டாலும், காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தை அந்த வாசனையை முர்ந்தபடி படிக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.
அதனால் நீங்களும் தேடித்தேடி வாசியுங்கள், நீங்கள் வாசிக்க வாசிக்கதான் புதுப்புது எழுத்தாளர்கள் வருவார்கள். எழுத்தாளர்களை மறந்த சமுதாயம் வருங்காலத்தில் வரலாற்றைப் படைக்க இயலாத சமுதாயமாக மாறிவிடும். எழுத்தாளர்களை ஊக்குவித்தால்தான் புதுப்புது புத்தகங்கள் கிடைக்கும்.
வெற்றி பெற்றவர்கள் எழுதியதுதான் வரலாறு என்று ஒரு சொல்லாடல் உண்டு. ஆகச்சிறந்த வீரர்கள் ஒன்றிணைந்த தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் இருந்தார்கள். 12 கோட்டைகள் இப்பகுதியில் இருந்ததால் பாரா மகால் என்று அழைக்கப்பட்டது.
தமிழ்நட்டில் முதன் முதலில் பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஒரு பேரரசின் தலைநகராக இல்லாததால் சங்கம் வளர்த்த மதுரைக்குக் கிடைத்த ஆவணப்படுத்தல் போன்ற பெருமை கிருஷ்ணகிரிக்குக் கிடைக்கவில்லை.
கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் என கிருஷ்ணகிரியின் வரலாற்றை ஆவணப்படுத்த இப்போது தொடங்கியிருக்கிறோம். அது குறித்த நூலும் வெளியிட்டுள்ளோம் விற்பனையில் தமிழகத்தில் நான்காம் இடத்திலிருக்கும் ஓசூர் புத்தக கண்காட்சியை முதலிடத்திற்குக் கொண்டு வருவோம்” என்றார்.