மருத்துவமனையில் இருக்கும் கிருபாவின் அப்பாவுடைய சிகிச்சைக்காக சத்யா பணத்தைக் கட்டிவிட்டுப் போகிறான். பணத்துக்காக அலைந்து திரிந்துவிட்டு வரும் கிருபா, அதன் பொருட்டு தங்கை உத்ராவிடம் கோபம் கொள்கிறான்.
அப்போது உத்ரா சொல்கிறாள், “சத்யா நல்லவர் அண்ணா”
படத்தின் இந்த இடத்தில், கிருபா முழுமையாக ஒரு கெட்டவனாக மாறி நிற்கிறான். அவன் யாருடன் கூட்டு சேர்ந்திருக்கிறான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அவனிடம் முதலில் சொல்லப்பட்டது போல லோகுவும், தயாவும் ஹவாலா பணத்தைக் கையாளும் பொருளாதாரக் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அப்பாவிச் சிறுமிகளைக் கடத்திப் பணம் பறிக்கும் கும்பல். அது மட்டுமேயில்லை, அந்தப் பெண்களை தயா வன்புணர்வு செய்கிறான் என்பதும் அவனுக்குத் தெரியும். இப்போது அவன் தன் தவறை உணர்ந்தாலும், அதிலிருந்து மீள எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, அந்தக் குழுவோடு இன்னும் நெருங்கியே செல்கிறான்.

இந்த சிஸ்டத்தின் மீதான அவனது கோபம், அவனை இந்தளவுக்கு ஒரு மோசமான மனிதனாக்கியிருக்கிறது. மிக நேர்மையாக எஸ்.ஐ தேர்வுக்காகப் படித்து, உடற்தகுதிகளை வளர்த்துக்கொண்டு, உண்மையாக உழைத்து, தேர்வெழுதிவிட்டுக் காத்திருந்த அவனை இந்த சிஸ்டம் ஏமாற்றிவிடுகிறது. தோற்றுப்போன பிறகு, அது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சத்யாவின் மீதான கோபமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் அவனை ஏமாற்றிய அந்த சிஸ்டத்தின் மொத்த அடையாளமாக, தனது முன்னாள் நண்பனான சத்யாவையே இலக்காக்கிக்கொள்கிறான். அதுவே அவன் சறுக்கிய மிக முக்கியமான இடம். அதுவே அவனது முடிவுக்கும் காரணமாகிறது.
ஆனால், உத்ரா சொல்வதைப்போல சத்யா நல்லவன்தானா?
எந்நேரமும் குடித்துவிட்டு, ரவுடித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்றுத் திரிந்துகொண்டிருந்த சத்யாவை நண்பர்கள் கேலி செய்கிறார்கள், அப்பா கண்டிக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பாகும் அவன் அரசு எந்திரத்தின் குறுக்கு வழிகளைப் பயன்படுத்திக்கொண்டு எஸ்.ஐ ஆகத் திட்டமிடுகிறான். எந்த இடத்திலும் அவனது நோக்கம் கிருபாவை முந்துவதில்லை, வீழ்த்துவதில்லை. மாறாக அவனைப் போலவே தாமும் ஒரு எஸ்.ஐ ஆகிவிடலாம் என்ற ஆசையில் குறுக்கு வழியில் செல்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான்.
அதன் பிறகும் அவன் சட்டென பொறுப்பானவனாக மாறிவிடுவதில்லை. குழப்பமாகத் திரிகிறான். ஒருநாள் இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனுக்காக இரக்கப்படும் ஒரு பூக்காரக்கிழவி சத்யாவை மாற்றியமைக்கிறாள். சத்யா அந்த இடத்தில், தன் கடமைகளை உணர்கிறான். பெண்ணை இழந்து, பயத்தால் போலீசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு தகப்பனிடம், ”உங்களின் ஒரு பிள்ளைக்காகப் பார்க்காதீர்கள். அப்படியான எத்தனையோ பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள். ஒத்துழைப்பு கொடுங்கள். நான் உங்கள் பிள்ளையை மீட்டுத்தருகிறேன்… நாங்கள் உங்கள் பிள்ளையை மீட்டுத்தருகிறோம்… நாம் நம் பிள்ளையை மீட்போம்” என்று சொல்கிறான். இந்த இடத்தில் சத்யா முழுமையாக ஒரு நல்லவனாக மாறி நிற்கிறான்.

ஆனால், சத்யா மாதிரியான எத்தனை பேர் சேர்ந்து, கிருபா மாதிரியான எத்தனை பேரின் கனவுகளைச் சிதைத்திருப்பார்கள் என்ற கேள்விதான் தொக்கி நிற்கிறது. என்ன செய்தாலும், என்ன சொன்னாலும், ஆதாரப்புள்ளி அதுதானே… அதிலிருந்து சத்யாவால் என்றைக்காவது மீளமுடியுமா?
படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர் மகேஷ் முத்துசாமி. இயக்குனர் மிஷ்கினின் துணிவான மற்றும் புதுமையான கதை சொல்லல் முறையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். நீளமான ஷாட்கள், ஏராளமான ஸ்டெடிகேம் ஷாட்கள், முழுமையான லோ ஆங்கிள் ஷாட்கள் (Worm’s-eye view), முழுமையான டாப் ஆங்கிள் ஷாட்கள் (Bird’s-eye view) என வழக்கத்துக்கு மாறான புதுமையான காட்சி மொழி, படம் முழுக்கக் கையாளப்பட்டிருந்தது.
படத்தின் முதல் காட்சியின், முதல் ஷாட் முழுமையான லோ ஆங்கிளில் அமைந்திருந்தது. வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் கேமராவுக்குள் நிதானமாக சிலர் வந்து நிற்கிறார்கள். அந்தக் காட்சி, பார்வையாளர்களான நம்மை ஒரு எறும்பின் பார்வைக் கோணத்தில் நிறுத்துகிறது. அந்தக் காட்சியில், ரெட் சிப் பொருத்திய சிட்டி போன்ற ஒரு பிரம்மாண்ட வில்லன் யாரும் வரவில்லை. குறைந்தபட்சம் இந்தக் கதையில் வில்லன்களாக லோகுவோ, தயாவோ கூட வரவில்லை. அவர்கள் ஒரு காட்சியில் வந்து போகும் சிறிய ரவுடிகள், அவ்வளவுதான். ஆனாலும், ’சிசிடிவி இருக்கா, ஹீரோ மூணு நேரம் சாப்பிட்டானா என்ற லாஜிக் ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல், காண்பிக்கப்படுவதைப் பாருங்கள். இது என் படம்.’ எனும் இயக்குநரின் ஆளுமை வெளிப்படுகிறது. லோகுவும், தயாவும் கிருபாவின் வீட்டில் ஒளிந்துகொள்வதற்காக வரும் ஒரு காட்சி, முழுக்கவும் நடிகர்களின் கால்களை மட்டுமே காட்டி, கிரவுண்ட் லெவல் ஷாட்டில் படம் பிடிக்கப்பட்டிருந்தது.

அந்தக் காட்சியை வழக்கம்போல படம் பிடித்தியிருந்தால், உத்ராவின் திடீர் வருகை, அதனால் ஏற்படும் பதற்றம், ஒளிந்துகொள்ளுதல் -இவையெல்லாம் நடிகர்களின் முகபாவங்களோடு இன்னும் வீரியமாகவே கிடைத்திருக்குமல்லவா? கிடைத்திருக்கும்தான். ஆனால், லோகுவைப் போலவே நாமும் அந்த வீட்டின் இன்னொரு இடத்தில் ஒளிந்து உட்கார்ந்துகொண்டு, அங்கே முழுமையாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற முழு புரிதலில்லாமல், பயத்தோடு, குரல்களை வைத்து எதையாவது கணிக்க முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்திருக்கும் அனுபவம் கிடைத்திருக்காது. போலவே, அந்தக் காட்சியில் உத்ராவின் இடத்திலும், கிருபாவின் இடத்திலும் கூட நம்மை வைத்து கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இப்படியான புதுமையான காட்சியமைப்புகள் ஒன்றிணையும்போது, ஒரு சாதாரண காட்சி கூட நமக்குள் ஓர் அசாதாரண உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
படத்தின் இசை சுந்தர் சி பாபு. மிஷ்கினின் முதல் படமான ’சித்திரம் பேசுதடி’யில்தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு பாடல். இந்தப் படத்திலும், கபிலன் எழுதி, மிஷ்கின் பாடிய, ‘கண்ணதாசன் காரைக்குடி’, நவீன் மாதவ் பாடிய, ‘கத்தாழக் கண்ணால குத்தாத’ என இரண்டுமே, வாள மீனைப்போலவே மிகப்பிரபலமான பாடல்களாக அமைந்தன. டைட்டில் பாடலாக வரும் பாரதியின் ‘அச்சம் தவிர்’ பாடலை மிஷ்கின் பாடியிருந்தார். பின்னணி இசை, பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கும் இப்படி ஒரு கதையின் உணர்வோடு கச்சிதமாக ஒத்திசைந்து இயங்கியிருந்தது.

நரேன், ’நிழல்கூத்து’ எனும் படத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானவர். அவரைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் மிஷ்கின். இந்தப் படத்தில் சத்யாவாக நடித்திருந்தார். தொடக்கத்தில் மிக இயல்பாக சுற்றிக்கொண்டிருக்கும் அவர், எஸ்.ஐ ஆன பிறகு, கடைசி வரை கிருபாவைக் காணும் ஒவ்வொரு காட்சியிலும் குற்றவுணர்வில் தவித்துக்கொண்டிருப்பார். கிருபாவாக அஜ்மல் நடித்திருந்தார். ‘உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் பாஸானா, என்னை மாதிரி ஆளெல்லாம் ஃபெயில்தாண்டா ஆவாங்க’ எனும் படத்தின் ஆதாரமான வசனம் கிருபாவின் வாயிலிருந்துதான் வருகிறது. நம்பிக்கையோடு தேர்வுக்குத் தயாராகும் போதும், இழப்பின் வலியோடு பின்னர் மெல்ல மெல்ல தயாவின் குழுவில் இணைந்து தன்னை இழக்கும் போதும், சத்யாவைப் போலவே இவருக்கும் குற்றவுணர்வுதான். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
தயாவாக பிரசன்னாவும், லோகுவாக பாண்டியராஜனும் நடித்திருந்தார்கள். 2002ல் ஃபைவ்ஸ்டார் எனும் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னாவுக்கு, இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. குறைவான வசனங்களோடு, அமைதியான, தர்க்கப்பூர்வமான, அச்சுறுத்தக்கூடிய ஒரு வில்லனாக இந்தப் படத்தில் பிரசன்னா தன்னை நிரூபித்தார். போலவே பாண்டியராஜனையும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் யாரும் எதிர்பார்த்திடவில்லை. தயாவுக்கு எதிரான குணநலன், அதே நேரம் சற்று விழிப்பான, உள்ளார்ந்த வஞ்சகத்தன்மை கொண்ட பாத்திரத்துக்கு அவர் சரியாகப் பொருந்திப்போனார். விஜயலட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர், பொன்வண்ணன், லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் இடங்களில் சிறப்பாக பொருந்தியிருந்தார்கள்.
படத்தை தயாரித்திருந்தது நேமிசந்த் ஜபக் நிறுவனத்துக்காக ஜிதேஷ் ஜபக். எழுதி இயக்கியிருந்தது மிஷ்கின். மிஷ்கினின் ’சித்திரம் பேசுதடி’க்குப் பிறகான இரண்டாவது படம் இந்த ’அஞ்சாதே’. மேலோட்டமாகப் பார்த்தால் காவல்துறைக்கும், பெண்களைக் கடத்தும் குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் ஒரு வேட்டைக் கதையாக, கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இது இருக்கிறது. அப்படியான படங்களை நாம் தொடர்ந்து பார்த்தும் வருகிறோம். ஆனால், மிஷ்கின் இதை வெறும் திரில்லராக மட்டுமே அணுகிவிடவில்லை. கிருபாவுக்கும், சத்யாவுக்கும் இடையே நடக்கும் ஒரு வீரியமான தத்துவப்போராட்டத்தை அதற்குள் அமைத்திருக்கிறார். அங்கேதான் அஞ்சாதே வித்தியாசப்பட்டு நிற்கிறது. மிஷ்கினும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்.

தனக்குத் தேவையானவற்றை, மற்றக் கலைஞர்களிடமிருந்து சரியாகப் பெறும் வல்லமை கொண்டவர்களே, சிறந்த இயக்குநர்கள். அந்தத் திறமையும், தனித்துவமும் மிஷ்கினிடம் இருக்கிறது. படம் நெடுக நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, கலை என அனைத்திலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. போலவே கதாபாத்திரங்களின் சிறப்பான வடிவமைப்பே ஒரு திரைக்கதையை மேம்படுத்துகிறது.
கீர்த்தி, சத்யாவின் மூத்த அதிகாரி. ஒரு காட்சியில் கீர்த்தியுடன் தயாவைப் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான தடயம் குறித்து சத்யா தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது ஓர் உயரதிகாரி, உள்ளே புகுந்து ‘ஸ்டேடஸ் அப்டேட்’ கேட்பதைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டே இருப்பான். அதற்கு அந்த அதிகாரி கோபத்துடன், ”நீ ஒரு டிரைனி, கீப் கொயட் அண்ட் மைண்ட் யுவர் பிசினஸ்” என்று கத்துவார். பதிலுக்கு, “திஸ் இஸ் மை பிசினஸ்” என்று சத்யா வெடிக்கும் காட்சி கதாபாத்திர வடிவமைப்புக்கு ஒரு சான்று.

குற்றவாளி என்பவன் எங்கிருந்தோ வந்து குதித்துவிடுவதில்லை. நேற்று வரை நம்முடன் இருந்தவன்தான். அவனுக்கும், நமக்குமான இடத்தைத் தீர்மானிப்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சிந்தனைப்போக்கும்தான் என்பதை இந்தப் படம் நினைவுறுத்துகிறது.
ஒரு மனிதனால் ஓர் அரசுத் தேர்வை டேம்பர் செய்ய முடியாமல் போயிருந்தால், ஒருவேளை அந்த முறைகேட்டை எதிர்த்து ஒரு மனிதன் போராட முடிவெடுத்திருந்தால் இந்தக் கதையின் ஹீரோ யார், வில்லன் யாரென்பதே மாறிப்போயிருக்கும். இப்படியான விளையாட்டுகளுக்கு நடுவேதான், நமது வாழ்வின் வெற்றிகளும், தோல்விகளும் கூட தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் ஒரு சப்-டெக்ஸ்டாக சொல்லிப்போகிறது அஞ்சாதே!
(தொடரும்)