அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | Attappadi Madhu murder case: Life imprisonment for culprits; Supreme Court verdict

Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞர் மது(30) 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார்.

பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருட்கள் திருடியதாகக் குற்றம் சுமத்தி மதுவை அஜமுடி காட்டில் இருந்து பிடித்து கொண்டுவந்த அந்தக் கும்பல் முக்காலி பகுதியில் கட்டி வைத்து தாக்கியது.

அந்தக் கும்பல் தாக்கும் வீடியோக்கள் அந்தச் சமயத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மது கொலை வழக்கில் மண்ணார்க்காடு பட்டியலினத்தவருக்கான தனி கோர்ட் கடந்த 04.03.2023 அன்று வழங்கிய தீர்ப்பில், நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.

முதல் குற்றவாளியான ஹுசைன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கு 05.03.2023 அன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 13 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

16-ம் குற்றவாளியான முனீருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே விசாரணை சமயத்தில் சிறையில் இருந்ததால் 500 ரூபாய் அபராத தொகை மட்டும் செலுத்தியதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 12 குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கோர்ட்டுக்கு வந்த அட்டப்பாடி மது குடும்பத்தினர்

கோர்ட்டுக்கு வந்த அட்டப்பாடி மது குடும்பத்தினர்

அந்தத் தீர்ப்பு மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மதுவின் தாய் மல்லி மற்றும் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம், தண்டனையை ரத்தாக்க வேண்டும் எனக் குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.ராஜா விஜயராகவன், நீதிபதி கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை ஆயுள் தண்டனையாக உயர்த்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *