கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாக இருந்த நிலையில், அதன் காலக்கெடு முடிவடையும் கடைசி நாளிலேயே, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நீட்டிப்பு காரணமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனம் (IREL – Indian Rare Earths Limited), கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போயிருக்கிறது.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அவசர அவசரமாக ஆணை பிறப்பித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1817 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு 1144 எக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 11.06,2021-ஆம் நாள் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.