அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆறு வாரங்களாக நிலவி வந்த கடும் மோதல்கள் முடிவுக்கு வரும் வகையில், இரு நாடுகளும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “அணு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எங்களிடம் ஒப்படைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் ஆழமாகப் புதைந்துள்ள அந்த ‘அணுத் தூசியை’ அவர்கள் திரும்பத் தர முன்வந்துள்ளனர்.

இது ஒரு நேர்மறையான நகர்வு. இந்த ஒப்பந்தம் இறுதியானால், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கையெழுத்திடும் நிகழ்வில் தான் நேரில் பங்கேற்கக்கூடும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை வாஷிங்டன் உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.
ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்துவதற்கு 20 ஆண்டு கால வரம்பு என்பது போதாது. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை நிரந்தரமாகத் தடுக்கும் வகையிலேயே ஒப்பந்தம் அமைய வேண்டும்.
அமெரிக்காவின் B-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் தற்போதைய ராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக, ஈரான் பேச்சுவார்த்தைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்டுகிறது.
அடுத்த இரண்டு நாள்களுக்குள் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தததை விட இப்போது ஈரான் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளது.
இந்த அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் போர்ச் சூழல் உருவாகும். தற்போது ஏற்பட்டுள்ள இராஜதந்திர முன்னேற்றங்கள் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். மிக முக்கியமான ஒன்று நிகழப்போகிறது, நீங்கள் காத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுவிட்டதாகக் கூறப்படும் செய்தி உண்மையில்லை. இதுவரை அத்தகைய ஏற்பாடுக்கு எதுவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஈரான் மறுத்திருக்கிறது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபிற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், “அமெரிக்காவிடம் எந்தவிதமான அணுப் பொருள் பரிமாற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் எந்தப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. இனியும் பேச்சுவார்த்தைகள் தொடர்வது ஈரானின் அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்குவதைப் பொறுத்தே அமையும்” எனவும் கூறப்படுகிறது.