நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் வென்றிருக்கிறது. இந்நிலையில் தவெகவின் வெற்றி குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்களில் கணிசமானவர்கள் தங்கள் தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். அதை பணிவோடு ஏற்றுக்கொள்வோம். ஒருவிதத்தில் தமிழகத்திற்குள் நுழைய பாஜக செய்த அனைத்து முயற்சிகளையும் நமது மக்கள் முறியடித்திருக்கிறார்கள்.

ஆட்சியில் இருந்த திமுக எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது. கூட்டணி பின்னடைவை சந்தித்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட தோல்வி நிச்சயம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அதை எதிர்கொள்கிற நெடிய அரசியல் அனுபவம் அவருக்கு உண்டு என்று நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகவும் வேதனையளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் எவ்வளவோ சவால்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. இதிலிருந்தும் மீளும். கூட்டணியின் சார்பாக வெற்றிபெற்றுள்ள அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்!
திரு .விஜய் அவர்களின் தவெக குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ,தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் பாரம்பரியமாக அரசியலில் நம்பப்படும் , வாக்குச் சாவடி கமிட்டி,மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு சார்ந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.