முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அண்ணாமலையின் We the leaders இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.கே விஸ்வநாதனை தொடர்ந்து பல முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் அண்ணாமலையின் We The Leaders இயக்கத்தில் இணையத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போது மத்திய பணியில் உள்ள தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரும் எதிர்காலத்தில் இந்த இயக்கத்துடன் இணைவது குறித்து ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மாற்று அரசியலை முன்வைத்து விஜய் தொடங்கிய தவெக கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தபோதிலும், ஏன் சில முன்னாள் அதிகாரிகள் அந்தக் கட்சியை விட அண்ணாமலையின் இயக்கத்தை நோக்கி நகர்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, தவெக ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் நிலையில் தற்போது அக்கட்சியில் இணைந்தால் தங்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் கிடைக்குமா என்ற தயக்கம் ஒரு புறமும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை அக்கட்சி தொடர்ந்து இணைத்துவருவதால் தங்களுக்கான இடம் உறுதியாகுமா என்ற குழப்பமும் மற்றொரு புறமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், We The Leaders இயக்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் அமைப்பாக இருக்கும் என்று அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், அவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் நிர்வாகப் பின்புலம் கொண்டவர்களுக்கு உரிய மரியாதை, பங்கு மற்றும் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை அதிகாரிகள் வட்டாரத்தில் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரணங்களே முன்னாள் அதிகாரிகள் மத்தியில் அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவும் ஆர்வமும் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.!