அண்ணா நகர் 2026! – சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

Spread the love

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும் விஐபிக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் அண்ணா நகர் தொகுதியின் களம், 2026 சட்டமன்றத் தேர்தலில் பரபரப்பை கூட்டிருக்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ எம்.கே.மோகனுக்குப் பதிலாக, இந்த முறை சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசுவை களம் இறக்கியிருக்கிறது அறிவாலயம். “யார் இந்த சிற்றரசு? அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இவர் குறித்து கூறுகிறார்கள் அவரது ஆதரவளர்கள்.

யார் இந்த சிற்றரசு? – கவுன்சிலர் டு மாவட்டச் செயலாளர்!

அண்ணா நகர் திமுக வேட்பாளர் நே. சிற்றரசுக்கு வயது 47. “நான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி; என் தாத்தா படிக்காதவர்; திமுக கொண்டு வந்த இட ஒதுக்கீட்டால்தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்” என்று தன்னடக்கத்துடன் பேசும் சிற்றரசு, அடிப்படையில் ஒரு தரைமட்டத் தொண்டராக அரசியலைத் தொடங்கியவர். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, கடும் போட்டிக்கு இடையே சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார்.

சிற்றரசு

மாவட்டச் செயலாளர் பதவி என்பது எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை விட அதிக அதிகாரமிக்கது என்று கருதப்படும் சூழலில், மிக இளைய வயதில் அந்தப் பொறுப்பை எட்டிப் பிடித்தார் சிற்றரசு. சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராகவும், முதல் நிலைக்குழு (First Committee) தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு அட்மின்ஸ்ட்ரேஷன் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதுதான் இவருக்கு தொகுதிக்குள் ஒரு ‘நிர்வாகி’ என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

தொகுதிக்குள் இருக்கும் செல்வாக்கு: ‘அணுகக்கூடிய மனிதர்’

அண்ணா நகர் தொகுதியில் சிற்றரசுக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே கடந்த 6, 7 ஆண்டுகளாக அவர் இந்தத் தொகுதியில் தொடர்ந்து களப்பணியாற்றி வருவதுதான். பொதுவாக, ஹை-புரொஃபைல் தொகுதிகளில் வேட்பாளர்களைப் பார்ப்பது கடினம் என்ற பிம்பத்தை உடைக்க முயல்கிறார் சிற்றரசு. “மக்கள் எளிதில் அணுகக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக நான் இருப்பேன்” என்கிறார்.

குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்திலும், பெருமழை வெள்ளக் காலத்திலும் இவர் செய்த களப்பணிகளை தொகுதி மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள். “கொரோனா காலத்தில் அதிமுகவினர் எட்டிப் பார்க்காதபோது, திமுகவினர் தான் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் அளித்தார்கள்” என்பதாக அடித்தட்டு மக்களிடம் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது. மேலும், சென்னை மேற்கு மாவட்டத்தில் உள்ள 712 பூத்திலும் இளைஞரணியை வலுப்படுத்தியிருப்பது இவருக்கு ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தையே பின்னால் நிறுத்தியிருக்கிறது.

பாசிட்டிவ் சிக்னல் கிடைத்தது ஏன்?

பத்திரிக்கைகள் நடத்திய மெகா சர்வேயின் முடிவுகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக வந்துள்ளது. அண்ணா நகரைப் பொறுத்தவரை சிற்றரசுக்கு ஏன் பாசிட்டிவ்வாக இருக்கிறது என்பதற்கு சில முக்கியக் காரணங்களைச் சொல்லலாம்:

திராவிட மாடல் திட்டங்கள்: காலை உணவுத் திட்டம், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டம் போன்றவை தொகுதியின் அடித்தட்டு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. “எங்கள் வீட்டுக்காரர் டயாலிசிஸ் நோயாளி; இந்த 1,000 ரூபாய் எங்களுக்குப் பெரிய நிம்மதி” என்று மக்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

உட்கட்சி பூசல்களைச் சமாளித்தது: ஒரு ஜூனியர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றபோது, சீனியர்களை எப்படிச் சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், “நான் அதிகாரத்தைக் காட்ட மாட்டேன்; மூத்த முன்னோடிகளை அவர்களின் வீடு தேடிச் சென்று சந்திப்பேன்” என்ற அவரின் அணுகுமுறை மாவட்டத்திற்குள் இருந்த கசப்புகளைக் குறைத்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் செல்வாக்கு: ஆற்காடு வீராசாமி முதல் எம்.கே. மோகன் வரை அண்ணா நகர் என்பது திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. முந்தைய எம்.எல்.ஏ-க்களின் நற்பெயரும் சிற்றரசுக்குத் தேர்தல் களத்தில் கைகொடுக்கிறது.

வெற்றி வாய்ப்புகள் மற்றும் வாக்குறுதிகள்: ‘டிராபிக்’ தான் டார்கெட்!

அண்ணா நகரில் சிற்றரசு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர் முன்வைக்கும் ‘டெவலப்மென்ட்’ திட்டங்கள் முக்கியக் காரணம்.

போக்குவரத்து நெரிசல்: அண்ணா நகரின் தீராத தலைவலியான டிராபிக் பிரச்சனையைத் தீர்க்க, ‘ஸ்கைவாக்’ (Skywalk) முதல் கே-4 காவல் நிலையம் வரை ஒரு புதிய மேம்பாலம் அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எலிவேட்டட் ஹைவே (Elevated Highway) கொண்டு வரும் திட்டத்தையும் அவர் முன்மொழிகிறார்.

சிற்றரசு

உள்கட்டமைப்பு: ஏற்கெனவே 120 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டும் அவர், எஞ்சிய பணிகளையும் விரைந்து முடிப்பேன் என்கிறார்.

ஸ்மார்ட் பார்க்கிங்: வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த ‘ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம்’ மற்றும் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும் யோசனையை வைத்துள்ளார்.

பாதுகாப்பு: பெண்கள் பாதுகாப்பிற்காகத் தொகுதி முழுவதும் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்தி, நவீன கண்காணிப்பு முறையை அமல்படுத்துவதாகக் கூறுகிறார்.

சவால்கள் என்ன?

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா களம் காண்கிறார். இருப்பினும், சிற்றரசு தரப்போ, “கோகுல இந்திரா 10 ஆண்டுகளாகப் பீல்டிலேயே இல்லை; 2016 மற்றும் 2021 தேர்தல்களில் மக்கள் அவரை நிராகரித்துவிட்டார்கள்” என்று தெம்பாகச் சொல்கிறார்கள். அதேபோல், இளைஞர்கள் மத்தியில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற பேச்சையும், “அது வெறும் மாயை; எங்களின் இளைஞரணி பலம் யாருக்கும் இல்லை” என்று சிற்றரசு மறுக்கிறார்.

மொத்தத்தில், 1,81,402 வாக்காளர்களைக் கொண்ட அண்ணா நகர் தொகுதியில், “மக்களோடு மக்களாகப் பயணிக்கும் ஒரு பிரதிநிதி தேவை” என்ற கோரிக்கையை சிற்றரசு கச்சிதமாகப் பிடித்துள்ளார்.” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *