ஒரு மாற்றுச் சிந்தனை:
எதிர்காலத்தில் பூமி வறட்சி அடையும் என்பதற்காக நாவல் மரங்கள் இப்போது அதிகமாகக் காய்த்துள்ளது என்றால், ஒருவேளை பூக்கள் குறைவாகப் பூத்து பழங்களின் விளைச்சல் குறைந்தால், அதற்கு “வெப்பம் வராது அல்லது வறட்சி ஏற்படாது” என்று அர்த்தமாகிவிடுமா? என்ற மாற்றுச் சிந்தனையையும் நாம் யோசிக்க வேண்டும்.
மனிதத் தவறுகளே காரணம்:
பூமி வெப்பமடைவதற்கும் வெயில் அதிகரிப்பதற்கும் மரங்களை அழிப்பது, நீர் மேலாண்மை திட்டங்களின் தோல்வி, குளம் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாதது போன்ற மனிதத்தவறுகளே பல காரணங்களாக இருக்கின்றன. வெப்பத்தைத் தாங்கக்கூடிய மரவகைகள் மற்றும் பூக்கள் வெப்ப காலத்தில் பூத்துக் காய்த்து கனியாவது இயற்கையானது.

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது பறவைகள், விலங்குகள் மற்றும் மீன்கள் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வது அல்லது ஒலியெழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. தாவரங்களுக்கும் பூகம்பம் போன்ற நிகழ்வுகளை உணரும் திறன் உண்டு. ஆனால், அவை சில மணி நேரங்களுக்கு முன்புதான் நடக்குமே தவிர, மூன்று மாதங்களுக்கு முன்பே அவற்றால் உணர்ந்து காட்ட முடியாது. தாவரங்கள் தற்போதைய சூழ்நிலையை உணருமே தவிர, பின்னாடி வரப்போகும் வறட்சியை முன்னாடியே யோசித்துச் சொல்லக்கூடிய அளவுக்கான திறன் அவற்றிற்கு இல்லை.
மனிதர்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் போது நிழலை நோக்கி ஓடுவதும், உடல் குளிர்ந்தவுடன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் போன்ற உடலின் தற்காப்பு செயல்பாட்டைப் (Body mechanism) போன்றதே தாவரங்களின் செயல்பாடும் (Plant mechanism) ஆகும்.
உண்மையான வறட்சி அறிகுறி எது?
பனை மரம் கடுமையான வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடிய ஒரு தாவரமாகும். அந்த பனை மரத்தின் குருத்தே கருகிப் போகிறது என்றால், அங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது மற்றும் கடுமையான வெப்ப காலம் நிலவுகிறது என்று பொருள். இதுதான் உண்மையான வறட்சி அறிகுறி.
“எனவே நாவல் பழத்தின் அதிக விளைச்சல் என்பது வருங்கால வறட்சிக்கான எச்சரிக்கை மணி அல்ல…!” எனத் தெளிவுபடுத்துகிறார் பேரா. கார்த்திகேயன்.