`அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை!’ – சி.வி.சண்முகம்

Spread the love

த.வெ.க அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதையடுத்து மன்னிப்புக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகளை மீண்டும் வழங்கவில்லை.

அது எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

சி.வி.சண்முகம்

தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.வேலுமணியை துணைப் பொதுச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளர்களாக இருந்த தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், அதேபோல் மற்றொரு மாவட்ட செயலாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குக் கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும் கட்சியில் வழங்கப்பட்டது.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சி.வி.சண்முகத்திற்குத் தற்போது வரை பொறுப்புகள் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று திண்டிவனத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள், `நீங்கள் த.வெ.க-வுக்கு செல்ல இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறதே’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, “நான் அதிமுகவில் இருக்கிறேனா என்று கேட்கிறீர்கள் அதானே….? நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. நீங்களே அதை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *