தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்தது மத்திய அரசு. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், பல்வேறு சர்ச்சைகள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து நீடித்துவந்தது.

தமிழகத்தின் நிலை போலவே, மேற்குவங்கத்திலும் ஆளுநருக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்தது. அந்த மாநில ஆளுநராக பதவியில் இருந்து வந்த ஆனந்த போஸ் மீது தொடர்ந்து மம்தா குற்றசாட்டுக்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஆனந்த போஸை ராஜினாமா செய்ய சொல்லி இருப்பதாக மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்ற இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.