அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளூமைகளாக வலம் வந்தனர்.
பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர் போன்றவற்றுடன் நில்லாமல் சினிமாவிலும் ரஜினி நடித்த சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பட்டிமன்றத்தை நோக்கி பாமர மக்களையும் திரும்ப வைத்த பெருமைக்குச் சொந்தக்காரரான பாப்பையா பத்மஸ்ரீ, விகடன் பெருந்தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

சன் டிவி தொடங்கியது முதல் அதில் தீபாவளி, பொங்கல் என்றால் இவரது பட்டிமன்றம்தான். ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோரைக் கொண்ட இவரது பட்டிமன்ற அணிக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.
சன் டிவி வரலாற்றிலேயே கடந்தாண்டுதான் இவரது தலைமையில்லாமல் பட்டிமன்றம் ஒளிபரப்பானது. அப்போதே வயோதிக பிரச்னை காரணமாக பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகச் சொன்னார்கள்.
இந்த நிலையில் இன்று முற்பகல் உடல்நலன் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடக்கவிருக்கிறது.
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
பாப்பையாவின் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்