“லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது தந்தை தங்கவேல் கடந்த வாரம் காலமானார்.
அவரது மரணச் செய்தி கேள்விப்பட்டதும் உடனே ஜீவாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினி.
இது குறித்து ஜீவாவிடம் பேசினோம்.

”நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்தார். முதுமைக்கால பிரச்னைகள்லாம் கூட பெரிசா இல்ல. ஆனா இவ்வளவு காலம்தான் அவருக்கு இந்த பூமியிலிருக்க கொடுப்பினை இருந்திருக்கு.
நல்ல உழைப்பாளி. குடும்பத்தின் மீது அவ்வளவு பாசமா இருந்தவர். அடிப்படையில் கமல் சார் ரசிகர். ஆனா நான் ரஜினி சார் ரசிகர் மன்றப் பணிகள்ல ஈடுபட ஆரம்பிச்சப்ப எந்த தடையும் சொல்லல. தாயும் பிள்ளையுமா இருந்தாலும் அவரவர்க்கு விருப்பு வெறுப்புகள் இருக்கும்னு நம்பினவர்.
சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். அதேநேரம் பிள்ளைகளை நல்ல பண்புடையவர்களாகவும் வளர்த்தார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்துகிட்டே அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டினார். காங்கிரஸ்காரர். அவருடன் பேசிப் பேசியே எனக்குள்ளும் அரசியல், பொதுப் பணிங்கிற தாக்கம் வந்திச்சுனு சொல்வேன்.
கமல் சார் ரசிகரா இருந்தாலும், அவர் கட்சி ஆரம்பிச்சதும் அந்தக் கட்சிப் பக்கம் போகலை.
ஒருவேளை கமல் சாரை அவரது நடிப்புக்கு மட்டும்தான் பிடிச்சதோ என்னவோ?