அமெரிக்காவில் ‘வள்ளுவன் தெரு’.. நூலகங்களில் தமிழ் நூல்கள்! – தமிழ் மையத்தின் 16 ஆண்டு சாதனைப் பயணம்! | Celebrating 16 Years of Phenomenal Tamil Educational Service in Virginia, USA

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அமெரிக்காவின் வட வர்ஜினியாவில் இயங்கி வரும் வள்ளுவன் தமிழ் மையம் தனது 16-ஆவது ஆண்டுவிழாவை மே 30, 2026 அன்று வியன்னா நகரிலுள்ள ஓக்டன் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடியது. இது ஒரு சாதாரண ஆண்டுவிழா அல்ல; அமெரிக்காவில் பிறந்து வளரும் தலைமுறைக்கு தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை தொடர்ந்து கொண்டு செல்லும் ஒரு சமூக இயக்கத்தின் வெற்றிக் கொண்டாட்டமாக அமைந்தது.

ஆண்டுக்கு ஏறக்குறைய 500இல் இருந்து 750 வரை என ஆயிரக்க்கணக்கான மாணவர்களுக்கு தமிழ்க் கல்வி வழங்கிவருகின்ற இப்பள்ளி, முழுவதும் தன்னார்வல ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பால் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது.

வள்ளுவன் தமிழ்மையம் அமெரிக்க அரசோடு ஒருங்கிணைந்து அமெரிக்க நூலகங்களில் தமிழ் நூல்களை அரசு அனுமதியுடன் செயல்படுத்தியது, அங்கீகரிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு நாள், திருவள்ளுவர் நாள் கொண்டுவந்தது, ‘வள்ளுவன் தெரு’ கொண்டுவந்தது போன்ற சில சிறப்பு முன்னெடுப்புகளையும் எடுத்ததும் குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகளாகும்..

இவ்வாண்டு விழாவில் பல தலைமுறைகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பங்கேற்றது பள்ளியின் தாக்கத்தையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியது.

“பதினாறு செல்வங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், பட்டமளிப்பு விழா, உலக மொழித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் மொழித் திறன் மட்டுமல்லாமல், மேடைப்பேச்சு, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றையும் மாணவர்களிடம் வளர்த்தெடுத்து வருவதை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

அரசு, கல்வி மற்றும் தமிழ் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பள்ளியின் பணியைப் பாராட்டினர். “தமிழ்மொழி கற்பித்தல் மட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டுத் தலைமுறைகளை உருவாக்குதல்” என்ற உயரிய நோக்குடன் செயல்படும் வள்ளுவன் தமிழ் மையத்தின் 16 ஆண்டுகால பயணம், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு சமூக சாதனையாக திகழ்கிறது.

-மகேந்திரன் பெரியசாமி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *